தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் திருவிழாவிற்கான அறிவிப்பு, வரும் மார்ச் 15 அல்லது 16-ஆம் தேதிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தற்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இன்றைய தினத்துடன் கேரளப் பயணம் முடிவடைவதைத் தொடர்ந்து, ஆணையர்கள் அடுத்தகட்டமாக மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் திட்டப்படி, மார்ச் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும், மார்ச் 10-ஆம் தேதி அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, மார்ச் 11-ஆம் தேதி டெல்லியில் சமூக ஊடக நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது. இந்தத் தொடர் சந்திப்புகளுக்குப் பிறகு, தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு அங்கு ஐந்து முதல் ஏழு கட்டங்களாகத் தேர்தலை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பொதுத் தேர்தலுடன் சேர்த்து, சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு எனப் பிரதான கட்சிகள் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மார்ச் மாத பாதியில் தேர்தல் அறிவிப்பு வெளியானால், ஏப்ரல் மாத இறுதியில் வாக்குப் பதிவு நடைபெற்று, மே மாத தொடக்கத்தில் புதிய அரசு அமைய வழிவகுக்கும்.
