கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துத் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலைப் பிடிக்கச் சென்றபோது, சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அவரைப் பிடிக்கச் சென்றனர்.
அப்போது போலீசாரைக் கண்டதும் பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், தற்காப்பிற்காகப் பாலமுருகனின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்ததையடுத்து, அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் போலீசாரால் சுடப்பட்ட இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
