ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) ஆதரவாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வே. ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் சூழலில், அவரது தீவிர ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவின் தாய் கழகத்திற்கே திரும்பி வருவது ஓபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . செஞ்சி ஏழுமலை ஏற்கனவே அதிமுக சார்பில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க முகமாக அறியப்படும் செஞ்சி ஏழுமலை, கொளத்தூர் டி. கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்துள்ள அடுத்த முக்கிய நிர்வாகி ஆவார் . எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் மீண்டும் கட்சியில் இணைந்த இந்த நிகழ்வு, வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் பலத்தை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது.
