பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்திற்குத் தனது தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் வினீத் சர்மா புத்தரபு (Vineeth Sharma Buddarapu), தனது தந்தையை ‘அனந்தா’ (Ananta) என்ற பிரம்மாண்டமான கூகுள் வளாகத்திற்கு அழைத்துச் சென்று சுற்றித் காண்பித்தார். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்த தங்களுக்கு, இது ஒரு மறக்க முடியாத உணர்ச்சிகரமான தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவில், வினீத்தின் தந்தை அலுவலகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலை (cafeteria), பசுமையான தோட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பகுதிகளை வியப்புடன் பார்ப்பது பதிவாகியுள்ளது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் ஊழியர்களுக்காக இவ்வளவு வசதிகள் இருப்பதைக்கண்டு அவர் ஆச்சரியமடைந்ததோடு, தனது மகன் இத்தகைய பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். “தனது தந்தை இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை இதற்கு முன் தான் பார்த்ததே இல்லை” என்று வினீத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சுமார் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘அனந்தா’ வளாகம், பெங்களூருவின் இயற்கை எழிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கூகுளின் மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த பயனர்கள், பெற்றோரின் தியாகங்களை அங்கீகரித்து அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்ற வினீத்தின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
