விமானப் பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் தியாகு ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
விமானப் பயணத்தின் போது, அங்கு பணியில் இருந்த 25 வயதுடைய பெண் ஊழியர் ஒருவரிடம் மதுபோதையில் இருந்த பிரபாகரன் மற்றும் தியாகு இருவரும் வம்பிழுத்துள்ளனர். அந்தப் பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்ததுடன், அவரது ஊர் பெயரைச் சொல்லி கேலி செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வரம்பு மீறி, அந்தப் பணிப்பெண்ணின் தொடையில் தட்டி பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து, மற்ற பயணிகள் அவர்களைக் கண்டித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பிய பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதி விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
