பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நவீன் குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது டதி பள்ளி சந்திப்பில் உள்ள ஒரு மரத்தில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை காங்கிரஸார் தொங்கவிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியது மற்றும் பிரதமரின் உருவபொம்மையை அவமதிக்கும் வகையில் தொங்கவிட்டது போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன் குமாரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களைப் பறக்கவிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலரைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸாரின் இந்தப் போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவினர் அங்கிருந்த மற்றொரு இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவபொம்மையைத் தொங்கவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசியல் தலைவர்களின் உருவபொம்மைகளை மாறி மாறித் தொங்கவிட்ட இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
