தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த செயல்வீரர்கள் கூட்டம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. 234 தொகுதிகளிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தலைமை அறிவித்திருந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலான தொகுதிகளில் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சில இடங்களில் அரசியல் விவாதங்களுக்குப் பதிலாக, தளபதி விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்டு தொண்டர்கள் நடனமாடியது, கட்சியின் தீவிர அரசியலை எதிர்பார்க்கும் விமர்சகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குளறுபடிகளுக்குக் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு இன்னும் முழுமையடையாததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1,100 ஒன்றியங்கள் மற்றும் 5,200 கிளைக் கழகங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை என்பது பெரும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடிமட்ட அளவில் பொறுப்பாளர்கள் இல்லாததால், தலைமையின் உத்தரவுகளைத் தொண்டர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், கூட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், வெறும் ஆரவாரத்தைக் குறைத்துக்கொண்டு, உட்கட்சிப் பதவிகளை விரைந்து நிரப்பினால் மட்டுமே தவெக ஒரு வலுவான அரசியல் சக்தியாகப் பரிணமிக்க முடியும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
