ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்துர்க் நகரில் இருந்து ராயதுர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த காரும் கூபனப்பள்ளி பகுதி அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர மோதலில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரின் இரும்பு பாகங்களை அறுத்து எடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கல்யாண்துர்க் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான மூன்று பேரும் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கல்யாண்துர்க் டி.எஸ்.பி. ரவி பாபு தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
