தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடும்பக் கௌரவத்தைக் காப்பதாகக் கூறி, தனது சொந்த அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (35) என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தம்பி முத்துராஜா (27), இது தொடர்பாகத் தனது அக்காவுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அக்காவின் செயல்பாடுகளால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாகக் கருதிய முத்துராஜா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதன்படி, தனது நண்பர் வசந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுமித்ராவின் வீட்டிற்குச் சென்ற முத்துராஜா, அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர், உயிரிழந்த சுமித்ராவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்த் ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது, “குடும்ப மானத்தைக் காக்கவே அக்காவைக் கொலை செய்தேன்” என்று முத்துராஜா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கௌரவக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
