2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வகுத்துள்ள தேர்தல் வியூகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறிய கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பதன் மூலம் திமுகவின் பலத்தை அதிகரிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த மாஸ்டர் பிளான் மூலம், சுமார் 180 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த புதிய உத்தியின்படி, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிகளை வெறும் 30 தொகுதிகளுக்குள் முடக்கி வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், கூட்டணிக் கட்சிகளின் தனிப்பட்ட செல்வாக்கை விட திமுகவின் சின்னமே பிரதானமாக முன்னிறுத்தப்படும்.
கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸுக்கும் இந்த முறை தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் கோரப்பட்டாலும், திமுக தலைமை 25 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. இதற்கு ஈடாக ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவியை வழங்க திமுக முன்வந்துள்ளது. இதன் மூலம் அதிக தொகுதிகளில் திமுக நேரடியாகவும், தனது சின்னத்திலும் போட்டியிடுவதை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
இறுதியாக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு சுமார் 30 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படலாம். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், சுமார் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தும். கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்தால், மொத்தம் 180 இடங்களில் உதயசூரியன் சின்னம் மின்னும். இந்த ‘ஸ்மார்ட்’ மூவ் மூலம் 2026 தேர்தலை ஒரு மிகப்பெரிய வெற்றியாக மாற்ற ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார்.
