2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில், கிரிஸ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் ஐவர் குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை தனது செல்வாக்கை நிலைநாட்ட 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இதற்காக 65 தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் தரப்பு வழங்கியுள்ள நிலையில், கூட்டணியின் ஒற்றுமையே பிரதானம் என இரு தரப்பு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், திமுக தலைமை தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், காங்கிரஸிற்கு 25 முதல் 28 இடங்கள் வரை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, ஒரு ராஜ்யசபா இடத்தை உறுதி செய்துள்ள திமுக, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் தயக்கம் காட்டி வருகிறது. ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸின் கௌரவம் குறையாத வகையில் பேச்சுவார்த்தை நடத்த சோடங்கர் குழு முயன்றாலும், தற்போதைய சூழலில் இழுபறி நீடித்து வருகிறது. அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
