மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் ருதியா என்பவருக்குத் தனது குடும்பச் சொத்து ஆவணங்களைச் சரிபார்க்கும் போது, கற்பனை செய்ய முடியாத ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. 109 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1917-ல் முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில், விவேக்கின் தாத்தா சேத் ஜும்மாலால் ருதியா அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35 ஆயிரம் ரூபாயைப் போர்க்கடனாக (War Loan) வழங்கியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பழைய கோப்புகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த இந்த ஆவணம், தற்போது விவேக்கின் கைகளில் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 35 ஆயிரம் ரூபாய்க்கு 1917 முதல் 2026 வரையிலான 109 ஆண்டுகளுக்கு, குறைந்தபட்சம் 5.5 சதவீத வட்டி கணக்கிடப்பட்டாலே, அதன் இன்றைய மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். விவேக்கின் தாத்தா 1937-லேயே மறைந்துவிட்ட நிலையில், அதற்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்று பிரிட்டிஷ் அரசு வெளியேறியதால் இந்த விஷயம் கவனிக்கப்படாமல் போயுள்ளது. தற்போது இந்தத் தொகையை இங்கிலாந்து அரசிடம் இருந்து சட்டப்பூர்வமாகப் பெற முடியுமா என்பது குறித்து விவேக் ருதியா வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சர்வதேச அளவில் இது போன்ற பழைய கடன்களைத் திரும்பப் பெறுவதில் பல சிக்கல்கள் இருந்தாலும், முறையான ஆவணங்கள் இருப்பதால் விவேக் தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது. ஒரு சாதாரண காகிதமாகக் கருதப்பட்ட ஆவணம் இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷமாக மாறியிருப்பது, “அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது” என்ற பழமொழிக்குச் சான்றாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் அரசு இந்தப் பழங்காலக் கடனை அங்கீகரித்து பணத்தைத் திருப்பி அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
