“பிரிட்ஜில் வைத்த உணவு”… 7 வயது சிறுமி பரிதாப மரணம்… கேரளாவில் நிகழ்ந்த சோகம்…..!

By Nanthini on மாசி 23, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே உள்ள எடச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியினருக்கு லஸ்னா (7 வயது) மற்றும் மின்சா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டில் பிரிட்ஜில் (குளிர்சாதன பெட்டி) பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உணவைச் சாப்பிட்ட ஹக்கீமின் குடும்பத்தினருக்கு திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி லஸ்னா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பிரிட்ஜில் நீண்ட நேரம் வைக்கப்பட்டிருந்த உணவு கெட்டுப்போயிருக்கலாம் என்றும், அந்த நச்சுத்தன்மை கலந்த உணவைச் சாப்பிட்டதே சிறுமியின் இறப்புக்குக் காரணம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹக்கீமின் வீட்டிற்குச் சென்று, அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

   

சிறுமி லஸ்னாவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடைக்காலம் தொடங்கி வரும் நிலையில், உணவுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்தும், நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ஒரு சிறுமி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.