உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால். இவருக்கும் ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் ஒரு வனத்துறை அதிகாரி என்பதால், காட்டின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதாகவும், அங்கு அழகான புகைப்படங்களை எடுக்கலாம் என்றும் கூறி அந்தப் பெண்ணை அவர் நம்ப வைத்துள்ளார். இதன் மூலம் அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஜெய்ஸ்வால் உறுதி அளித்துள்ளார். இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய அந்தப் பெண்ணுடன், கடந்த 6 மாதங்களாக அவர் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அந்த இளம்பெண் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, ஜெய்ஸ்வால் அவரைத் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வனத்துறை அதிகாரி ஜெய்ஸ்வால் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
