இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் சச்சின் அவஸ்தி மற்றும் அவரது மனைவி தீப்ஷிகா மிஸ்ரா ஆகியோர், தென் கொரியாவின் ஜேஜு தீவிற்குச் சென்றபோது அங்குள்ள அதிகாரிகளால் சுமார் 38 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகுந்த காரணங்கள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்ட தங்களை, அதிகாரிகள் குற்றவாளிகளைப் போல நடத்தியதாகவும், சூரிய ஒளி கூட இல்லாத ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அங்கு அவர்களுக்குப் போதிய உணவோ, நீரோ வழங்கப்படவில்லை என்றும், கழிவறைக்குச் செல்லும் போது கூட காவல்துறையினர் பாடிகேமராவுடன் பின்தொடர்ந்து கண்காணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்தச் சோதனையான காலத்தில் அவர்கள் நாடு திரும்ப விரும்பியபோது, சாதாரண விலையை விட 10 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். சீனா வழியாகத் திரும்பும் பயணத்தின் போதும் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். தனது இந்த அனுபவம் அனுதாபத்திற்காக அல்ல, மாறாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் அங்குள்ள எதார்த்த நிலைமைகளை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பகிர்வதாக சச்சின் அவஸ்தி கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
