மத்தியப் பிரதேச மாநிலம் ததியா பகுதியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனையே மனைவி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, சிந்த நதி பாலத்திற்கு அடியில் உள்ள புதர்களுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத உடலாகக் கருதப்பட்டு போலீஸாரால் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் காணாமல் போன ஹன்ஸ்ராஜ் வர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் ஹன்ஸ்ராஜ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவிற்கும், அவரது உறவினரான ஹேமந்த் ஆர்யாவிற்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி வந்த பபிதா, தனது காதலனுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சதித் திட்டத்தின்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்த் மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் ஹன்ஸ்ராஜை மது அருந்த வருமாறு ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த மஃப்ளரால் ஹன்ஸ்ராஜின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் புதருக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொலையை மறைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் பபிதா நாடகமாடி வந்துள்ளார்.
இறுதியாக, போலீஸார் செல்போன் அழைப்புத் தரவுகளை (CDR) ஆய்வு செய்தபோது, பபிதா மற்றும் ஹேமந்த் இடையே அடிக்கடி பேசப்பட்ட தகவல்கள் கிடைத்தன. இதன் மூலம் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தற்போது கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட மனைவி பபிதா, அவரது காதலன் ஹேமந்த் மற்றும் கொலையில் உதவிய அனில் ஆகிய மூவரையும் ததியா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
