தமிழக சட்டப்பேரவையில் இன்று பிப்ரவரி 17, 2026 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவை வளாகத்தில் ஒரு வினோதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திமுக அரசு கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்ற பெயரில் மக்களுக்கு “காது குத்தும் விழா” நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, அதற்கான ஒரு போலி அழைப்பிதழைத் தயார் செய்து கையில் ஏந்தியபடி அவர்கள் முழக்கமிட்டனர். இந்த அழைப்பிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவதாகவும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவதாகவும் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பத்திரிகையில் கூவம் சுத்திகரிப்பு, சென்னை மழைநீர் வடிகால் மற்றும் சிங்காரச் சென்னை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்குப் பொதுமக்கள் பல்வேறு முறைகளில் “மொய்” வைக்கலாம் என்ற வாசகங்களையும் அதிமுகவினர் இடம்பெறச் செய்துள்ளனர். பட்ஜெட் தாக்கலுக்குச் சற்று முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
