தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் உரிமை’ என்ற ரீதியில் இவர்கள் பேசி வருவது திமுக தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், கூட்டணியைக் குழப்ப நினைக்கும் இத்தகைய குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து அதிருப்தி கிளப்பும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்த பின்னரே, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முடியும் என திமுக நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு காட்டமான மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணியின் ஒழுக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே திமுகவின் வாதமாக உள்ளது. இதனால், வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
