தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் கண்முன்னே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் (35) என்பவர், தனது மனைவி லட்சுமிக்கும் விஸ்வநாத் (30) என்பவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை அறிந்து ஊருக்குத் திரும்பியுள்ளார். பலமுறை கண்டித்தும், சமரசம் செய்ய முயன்றும் மனைவி தனது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த கங்காதர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விஸ்வநாத்தை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று லட்சுமி மற்றும் விஸ்வநாத் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஜக்தியாலா பைபாஸ் சாலையில் கங்காதர் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். மனைவியின் கண்முன்னே விஸ்வநாத்தை மரக்கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பயங்கர கொலை குறித்து ஜக்தியாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கங்காதர் மற்றும் அவரது நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
