தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் இரு துருவங்களாக விளங்கிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் ஒன்றிணைக்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் பலமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியும், முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவைப் பெற்றுள்ள ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வரும் தேர்தல்களில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என பாஜக மேலிடம் கருதுகிறது. இருப்பினும், ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு இபிஎஸ் தரப்பு கடும் பிடிவாதம் காட்டி வருவதால், இந்த முட்டுக்கட்டையை உடைக்க ஒரு புதிய வியூகத்தை பாஜக வகுத்து வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் பதவி வழங்கி அவரைத் தீவிர அரசியலில் இருந்து கௌரவமாக விலக்கி வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஓபிஎஸ் தமிழக அரசியலை விட்டு வெளியேறி ஆளுநராகப் பொறுப்பேற்றால், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காது என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. இதன் மூலம் அதிமுகவில் இபிஎஸ்-ன் ஒற்றைத் தலைமைக்கு இருந்த நெருக்கடி குறைவதுடன், தென் மாவட்டங்களில் சிதறிக்கிடக்கும் ஓபிஎஸ் ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைக்கவும் வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் கைகூடினால், அவர் மணிப்பூர் அல்லது மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
