தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தொகுதிகளை மையப்படுத்தி பாஜக தனது தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. ஆன்மீக அடையாளத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து, இந்த ஆறு புனித தலங்களிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த வியூகத்தின் முக்கியப் புள்ளியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி உருவெடுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய சாதகமான தீர்ப்பை, முருக பக்தர்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றியாக பாஜக முன்னிறுத்துகிறது. இதனை ஒரு முக்கியப் பிரச்சாரப் பொருளாக மாற்றி, திராவிட மாடல் அரசியலுக்கு மாற்றாக “முருகன் அரசியல்” என்ற அடையாளத்தை முன்வைக்க அக்கட்சி முயல்கிறது.
பாஜகவின் இந்தத் திட்டத்தின்படி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை (பாபநாசம்), திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை (மதுரை கிழக்கு) ஆகிய ஆறு தொகுதிகளையும் அதிமுகவிடம் கேட்டுப் பெற அக்கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. அந்தந்த தொகுதிகளில் உள்ள சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்ப, குறிப்பாக முக்குலத்தோர், நாடார் மற்றும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வலுவான வேட்பாளர்களை நிறுத்தி திமுகவின் கோட்டைகளைத் தகர்க்க பாஜக திட்டமிடுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை, திமுகவிற்கு எதிரான ஆன்மீக வாக்குகளை ஒருங்கிணைக்க இந்த வியூகம் உதவும் என்றாலும், தனது பாரம்பரிய மதச்சார்பற்ற பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டிய சவாலை எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்டுள்ளார். வேல் யாத்திரை முதல் தற்போதைய தீப விவகாரம் வரை பாஜக எடுத்து வரும் இந்த ‘முருகன் செண்டிமெண்ட்’ முயற்சிகள், வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
