தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (பிப். 10) மாலை 4 மணிக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும், பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் எக்காரணம் கொண்டும் வருத்தப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்குத் தவெக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
தேர்தல் களப்பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் வகையில் அடிமட்ட அளவில் பணிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நிர்வாகிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
