உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பதியாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் (45), தன் மனைவி பூஜா (40) அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் பழகி வந்ததைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூஜா, தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரன்வீர் சிங்கிற்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவரைப் போதையில் ஆழ்த்திய பூஜா, அவர் நிலைகுலைந்திருந்த நேரத்தில் கள்ளக்காதலனை வரவழைத்து கோடாரியால் கணவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், ரன்வீர் சிங்கின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பூஜாவையும் அவரது கள்ளக்காதலனையும் தீவிரமாகத் தேடி வந்த போலீஸார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்தனர். லாரி ஓட்டுநரான ரன்வீர் சிங் பணி நிமித்தமாக வெளியே செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி இந்தத் தகாத உறவு நீடித்ததும், அதுவே இந்தப் படுகொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
