தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் திரைக்குப் பின்னால் இருந்து காய் நகர்த்தி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தற்போது முதன்முறையாக நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தேர்தல் வியூகங்கள், முக்கிய சந்திப்புகள் என நிழல் உலக நாயகனாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் பங்கேற்றுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேரடியாக உரையாடியது, அவர் தனது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான தெளிவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் திடீர் வருகை வெறும் ஆலோசனையோடு மட்டும் நின்றுவிடவில்லை; வரவிருக்கும் தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்விலும் சபரீசன் மிக முக்கியப் பங்காற்றி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் செல்வாக்கு, வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு மற்றும் கள நிலவரம் குறித்த தரவுகளைத் திரட்டி, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன், கட்சியின் உள்விவகாரங்களிலும் அவர் காட்டும் நேரடி ஆர்வம், திமுகவின் எதிர்கால அதிகார மையங்களில் ஒன்றாக அவர் உருவெடுப்பதையே காட்டுகிறது.
