கொங்கு மண்டலத்தின் அரசியல் களம் எப்பொழுதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாதது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே நடைபெறும் “ஆள் பிடிக்கும்” படலம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த எட்டாம் தேதி திமுக மாவட்ட நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான பசுவை கி. வடிவேல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோட்டையை பலப்படுத்த அதிமுக வியூகம் வகுத்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே களம் தலைகீழாக மாறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதிமுகவில் இணைந்த ஒரே நாளில் மனம் மாறிய வடிவேல், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். இந்த அதிரடி திருப்பம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் அதிரடி அரசியலால், அதிமுகவின் வியூகம் முறியடிக்கப்பட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஒரே நாளில் கட்சி மாறிய இந்தச் சம்பவம், கொங்கு மண்டலத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டி எந்த அளவிற்கு அனல் பறக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
