தமிழக அரசியல் களம் தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜான் பாண்டியன், இந்த முறை தென்மாவட்டத்தில் களம் காண்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு ஒட்டபிடாரம் தொகுதியை ஒதுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இதே பகுதியில் தனது செல்வாக்கை நிரூபித்த ஜான் பாண்டியனுக்கு, இந்தத் தொகுதி சாதகமாக இருக்கும் என அக்கட்சி கருதுகிறது. இதன் காரணமாக, ஒட்டபிடாரம் தொகுதியை மையமாக வைத்து ஜான் பாண்டியன் தனது தேர்தல் பணிகளை இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், அதே ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிட நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இணைவதில் ஏற்கனவே இழுபறி நீடித்து வரும் சூழலில், தனக்கு விருப்பமான தொகுதி கிடைக்காதது அவரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது குறித்தும், அந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
