சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ல் ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரது ஓய்வு குறித்த ஊகங்கள் ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வரும் நிலையில், 2026 ஐபிஎல் சீசனிலும் அவர் விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2025 சீசனில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, அடுத்த சீசனில் (IPL 2026) தான் களமிறங்குவது குறித்து தோனி நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோனியின் ஓய்வு முடிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், ஓய்வு என்பது முற்றிலும் தோனியின் தனிப்பட்ட முடிவு என்றும், அவர் இதுகுறித்து யாரிடமும் முன்கூட்டியே விவாதிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். “தனது ஓய்வை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்; அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் அதைச் செய்வார்” என அவர் விளக்கமளித்தார். மேலும், தோனி ஒரு வீரராக ஓய்வு பெற்றாலும், அவர் எப்போதும் சென்னை அணியுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
