புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தேர்தல் பணிகள் இருப்பதால் முன்னதாகவே சனிபகவானை தரிசிக்க வந்ததாகக் கூறினார். மேலும், சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது என்றும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் என மக்கள் பேசத் தொடங்கி விட்டனர் என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார். புதுவையிலும் இதே பேச்சு தொடங்கி விட்டதாகவும், அற்புதமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்கிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
