தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்தின் ஊதியத்தில் 15 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2015-இல் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், காலக்கெடுக்கூறிய காலவரம்பிற்குப் பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், வருமான வரித்துறை விதித்த அபராதம் சட்டப்பூர்வமான காலவரம்பிற்குள் தான் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி அமர்வு, விஜய்யின் வாதத்தை நிராகரித்தது. இந்த தீர்ப்பின் மூலம் வருமான வரித்துறை விதித்த 1.50 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காலவரம்பு தொடர்பான பிரச்சனையைத் தவிர்த்து, அபராதம் தொடர்பான மற்ற விவரங்கள் குறித்து விஜய் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
