தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 9ஆம் தேதியே தனது கட்சியின் கூட்டணி முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தும், தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர், இறுதியில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவிற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
20 ஆண்டு கால அரசியல் பயணத்தில், தேமுதிக தனது பரம்பரை அரசியல் எதிரியாகக் கருதிய திமுகவுடன் இதுவரை ஒருமுறை கூட கூட்டணி அமைத்தது இல்லை. “திமுக, அதிமுகவிற்கு மாற்று” என்று முழங்கிய மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கொள்கைக்கு மாறாக, முதல் முறையாக ‘உதயசூரியன்’ சின்னத்தோடு பிரேமலதா கைகோர்ப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
