அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது முதலே, எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை அவர் கொடுத்து வருகிறார். தொடக்கத்தில் பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக விமர்சித்த தினகரன், பாஜக மேலிடத்தின் அழுத்தத்தால் கூட்டணியில் இணைந்தாலும், தனது பேச்சுகள் மூலம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு “துரோகத்திற்கான நோபல் பரிசு” வழங்கலாம் என்று அவர் கூறியது, தற்போதைய தேர்தல் சூழலில் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
திமுக தனது பழைய கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல்கள் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. பழனிசாமி முதலில் தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்ததும், பின்னர் பாஜகவின் வற்புறுத்தலால் தினகரன் உள்ளே வந்ததும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. “வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல” தினகரன் தந்து வரும் குடைச்சல்கள், தேர்தல் களத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்குமோ என்ற அச்சத்தை அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
