திமுக நிர்வாகிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பான முடிவுகளைக் கட்சித் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும், அதுவரை தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் இல்லை என்றும், திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே சிதைந்துவிடும் என்றும் அவர் பேசிய கருத்துகளுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய மோதல் போக்குகள் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என்று அகில இந்திய தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது திமுகவும் தனது நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. தேவையற்ற பொதுவெளி விவாதங்கள் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்பதால், கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
