“பெத்தவங்களால இனியும் முடியாது, நான் செத்துடுறேன்”… கணவனின் வெறிச்செயலால் இளம்பெண் விபரீத முடிவு…!

By Nanthini on தை 27, 2026

Spread the love

பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்காக கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்டபோது விரிசல் ஏற்படத் தொடங்கியது.

வீடு கட்டுவதற்குத் தேவையான கூடுதல் பணத்தை கீர்த்தியின் பெற்றோரிடம் கேட்டு வாங்கி வருமாறு குருபிரசாத் கட்டாயப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தாராளமாகச் செலவு செய்திருந்த நிலையில், மீண்டும் பணம் கேட்க மனமில்லாமல் கீர்த்தி மறுத்துள்ளார். இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் கீர்த்தியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி 8 லட்சம் ரூபாயை குருபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் மனநிறைவு அடையாத குருபிரசாத், கூடுதல் வரதட்சணை கேட்டு கீர்த்தியைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

   

தொடர்ந்து அதிகரித்த வரதட்சணை கொடுமையாலும், தனது பெற்றோரின் ஏழ்மை நிலையைக் கண்டும் மனமுடைந்த கீர்த்தி, கடந்த 24-ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீர்த்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பனசங்கரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் குருபிரசாத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.