பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி அழகுராஜா காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அழகுராஜாவை, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீட்க காவல்துறையினர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அழகுராஜா மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் உதவி ஆய்வாளர் சங்கரை வெட்டியும் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த வி.கே. குருசாமி மற்றும் ராஜபாண்டி தரப்பினரிடையே கடந்த 23 ஆண்டுகளாக நிலவி வரும் தொடர் மோதல்களின் பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை சுமார் 21 கொலைகள் பழிக்குப் பழியாக அரங்கேறியுள்ள நிலையில், வெள்ளைகாளியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலே அழகுராஜாவின் என்கவுன்ட்டருக்கு வித்திட்டுள்ளது. தற்போது காயமடைந்த காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரவுடி அழகுராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
