“தவெகவுக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க”…. மேடையிலேயே தொண்டர்களுக்கு செங்கோட்டையன் கொடுத்த ஷாக் அட்வைஸ்….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் சுமார் 50 ஆண்டு கால அனுபவம் கொண்ட தனக்கு, வருங்கால தமிழகத்தை ஆளப்போகும் ஒரு புதிய முகமான விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், பல அரசியல் தலைவர்களைத் தான் கண்டிருந்தாலும், விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஈர்ப்பும் இந்திய வரலாற்றிலேயே யாருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு என்று அவர் புகழ்ந்து பேசினார்.

விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். “எத்தனை கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து வந்தாலும், அந்த 8 அல்லது 10 கட்சிகளின் பலத்தை ஒற்றை ஆளாகத் தவிடுபொடியாக்கும் சக்தி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மட்டுமே உண்டு” என்று அவர் சூளுரைத்தார். மற்ற கட்சிகள் பணம் கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டும் நிலையில், ஒரு ரூபாய் கூட பெறாமல் மக்கள் தன்னெழுச்சியாகக் கூடுவதே விஜய்யின் வெற்றிக்குச் சான்று என்றும், அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

   

கூட்டத்தில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய செங்கோட்டையன், கட்சிக்குக் கிடைத்துள்ள ‘விசில்’ சின்னத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது இடங்களில், குறிப்பாகப் பேருந்து நிலையங்களில் வயதானவர்கள் மற்றும் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதுகளுக்கு அருகே விசிலை ஊதி அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அத்தகையச் செயல்கள் வாக்குகளைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார். மக்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தைத் துறந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் தொலைநோக்குப் பார்வையை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், கண்ணியமான முறையில் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.