2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் இழுபறி நிலையில் வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மௌனம் காத்து வருவது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆனால், தேமுதிக தரப்போ 21 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அமைச்சர் பதவி என பெரிய அளவிலான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட முடிவை நோக்கியே பிரேமலதா காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கும் பட்சத்தில், அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளைப் பெறலாம் என்பது தேமுதிகவின் திட்டமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, பத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்தால் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், தேமுதிக ஒரே நேரத்தில் இரு திராவிடக் கட்சிகளுடனும் அதிகப்படியான தொகுதிகளைக் கேட்டுப் பேரம் பேசி வருவது அந்தந்த கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழுபறி நீடித்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவை கழற்றிவிடவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 2026 தேர்தலில் தேமுதிகவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது வரும் நாட்களில் தெளிவுபெறும்.
