ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன், திமுகவில் இணையப்போவதாக அறிவித்த ஒரே நாளில் தனது முடிவை மாற்றி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று வரை ஜனவரி 26-ல் திமுகவில் இணையப்போவதாகக் கூறிவந்த குன்னம் ராமச்சந்திரன், இன்று கண்ணீருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் திமுகவில் இணைய முடிவெடுத்ததை அறிந்த என் தாய், ‘நம் வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிடுவாயா?’ என்று கேட்டார். அந்தக் கேள்வி என் நெஞ்சத்தை உலுக்கிவிட்டது” என உருக்கமாகத் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் மற்றும் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தக் கட்சியிலும் இணையாமல் பொது வாழ்க்கையில் இருந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான விசுவாசத்திற்காகத் தனது அரசியல் முடிவை அவர் மாற்றிக்கொண்டது பெரம்பலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைத்திலிங்கம் போன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனின் இந்தத் திடீர் பின்வாங்கல் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
