விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு SC-யில் விசாரணைக்கு வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையின் முடிவு ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கு மிக முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், தணிக்கை சிக்கல்களைக் கடந்து திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்பது இன்றைய விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.
