பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தியதாக எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தான் எந்த நேரத்திலும் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ கைது செய்யப்படலாம் என்று சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றின் மூலம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, தான் ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு தனது அலுவலகத்திற்குச் சீல் வைக்கவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் முயற்சித்து வருவதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் சவுக்கு மீடியாவின் குரலை முழுமையாக ஒடுக்க அரசு அடக்குமுறைகளைக் கையாள்வதாக அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த சவுக்கு சங்கர், தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டப் போராட்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தன்னையும் தனது குழுவினரையும் முடக்குவதற்காக அடுத்த 40 முதல் 45 நாட்களுக்குத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு மக்கள் வரும் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்தத் திடீர் வீடியோ மற்றும் கைது அச்சம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
