நள்ளிரவு நேரத்தில் உணவு டெலிவரி செய்வது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் டெலிவரி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் பிரியாணி மற்றும் குலாப் ஜாமூன் ஆர்டர் செய்த வாடிக்கையாளர், உணவை தனது வீட்டு வாசலுக்கே வந்து வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் தனது வாகனத்தைப் பாதுகாப்பற்ற முறையில் சாலையில் விட்டுவிட்டு மேலே வர முடியாது என்று ஸோமாட்டோ ஊழியரான அங்குர் தாக்கூர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டது. அதன் பின், அந்த ஊழியர் தான் கொண்டு வந்த உணவை அங்கேயே அமர்ந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவம் இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர், சேவைக்காகப் பணம் செலுத்துவதால் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதுதான் முறை என்று வாடிக்கையாளருக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். ஆனால், நள்ளிரவு நேரக் குளிர் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, டெலிவரி ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, டோர்ஸ்டெப் டெலிவரி வசதியா அல்லது ஊழியர்களின் பாதுகாப்பா என்ற புதிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது.
