திடீர் திருப்பம்… விஜயகாந்த் பாணியில் பிரேமலதா எடுத்த முடிவு… இந்த தொகுதியில் தான் போட்டியா?… பரபரப்பு தகவல்…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்க உள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அக்கட்சியின் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பற்றி ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார். கூட்டணி குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் மற்ற கட்சிகள் யாரும் இன்னும் கூட்டணி அறிவிப்பை வெளியிடாத நிலையில் தாங்கள் அவசரப்பட விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என அவர் கூறியுள்ளது தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006-ஆம் ஆண்டு முதன்முதலில் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், விருத்தாசலம் தேமுதிகவினருக்கு ஒரு சென்டிமென்ட் மற்றும் ராசியான தொகுதியாகக் கருதப்படுகிறது. கட்சியின் அடித்தளத்தை மீண்டும் பலப்படுத்தவும், தொண்டர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் இந்தத் தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்து வந்த அக்கட்சிக்கு, விஜயகாந்த் பாணியிலேயே பிரேமலதா களமிறங்குவது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் அரசியலில் தடம் பதித்த அதே மண்ணில் நின்று வெற்றி பெறுவதன் மூலம், தேமுதிகவின் அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த அவர் தீவிரமாகச் செயல்படுவார் எனத் தெரிகிறது.