தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளார். ஆனால் அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைப்பிற்கு சாத்தியமில்லை என கூறிய இபிஎஸ் டிடிவி தினகரனுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் டிடிவி தினகரன் அதிமுகவில் மீண்டும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
