தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் பாமக அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதலால் இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில் நேற்று அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்தது. இது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ள நிலையில் ராமதாஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை மிகப்பெரிய எதிர்பார்ப்பாக நிலவி வருகிறது.
இப்படியான நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியிலிருந்து விலகிய கள்ளிப்பட்டி ஆறுமுகம் தனது ஆதரவாளர்கள் 5000 பேருடன் அன்புமணி முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். நேற்று இரவு கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்று உள்ளது. பாமகவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கிய பண்ருட்டி வேல்முருகனுடன் இணைந்து கட்சியை வளர்க்க முக்கிய பங்காற்றியவர். இதனால் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
