ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை ‘UTS’ என்ற மொபைல் செயலி மூலம் வாங்கினால் இனி 3 சதவீத சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதமில்லா பயணத்தை ஊக்குவிக்கவும், ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நிலவும் நீண்ட வரிசையைக் குறைக்கவும் இந்த அதிரடி மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக இந்தச் சலுகை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பயணிகளின் நலன் கருதி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பெற பயணிகள் தங்கள் மொபைலில் உள்ள ஆர்-வாலெட் (R-Wallet) மூலமாகப் பணத்தைச் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை பணத்தை அதில் வரவு வைக்கும்போதும், கூடுதல் தொகையாக இந்த 3% போனஸ் சலுகை பயணிகளுக்குக் கிடைக்கும். இதன் மூலம் ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே, சில நொடிகளில் உங்கள் மொபைலிலேயே எளிதாக டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும். நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த டிஜிட்டல் முறைக்கு மாற்றிக்கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
