பெங்களூருவில் தினமும் 4 பைக்குகளைத் திருட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நான்கு பேர் கொண்ட பலத்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் குறிப்பாக ‘ஸ்ப்ளெண்டர்’ ரக மோட்டார் சைக்கிள்களை மட்டுமே கள்ளச்சாவி மூலம் சில நொடிகளில் திருடுவதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் தொடர்ச்சியாக நடந்த வாகனத் திருட்டுப் புகார்களை அடுத்து தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், வேலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த ரஞ்சித், யுவராஜ் உள்ளிட்ட நால்வரைப் பிடித்துள்ளனர். திருடப்பட்ட வாகனங்களை இவர்கள் தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திராவின் மலைக் கிராமங்களுக்குக் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக ‘புஷ்பா’ திரைப்படப் படப்பிடிப்பு நடந்த கரடுமுரடான மலைப் பகுதிகளுக்கு ஏற்ற வாகனம் என்பதால், அங்குள்ள மக்களிடம் இவற்றை எளிதாக விற்பனை செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 பைக்குகளைப் பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் மூவரைத் தேடி வருகின்றனர்.
