மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கூரியர் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குவாலியர் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் 2023-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ரவி (எ) ரோஹித் சிங் தோமர் பழகி வந்துள்ளார். தான் திருமணமாகாதவர் என்று பொய் கூறி அந்தப் பெண்ணிடம் நட்பு கொண்ட ரவி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்த வாக்குறுதியை நம்பி அந்தப் பெண்ணைத் தனியார் விடுதிக்கு வரவழைத்த ரவி, அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமண ஆசை காட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகச் சுரண்டி வந்த ரவி, அந்தப் பெண் திருமணம் செய்ய வற்புறுத்தும் போதெல்லாம் மழுப்பலான பதில்களை அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் ரவியைப் பற்றி விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட உண்மை தெரியவந்தது. ஏமாற்றமடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் ரவி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
