பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் மருத்துவருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தனியாகச் சென்று கொண்டிருந்த அந்த மருத்துவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். திடீரென வழி கேட்பது போல அவரிடம் நெருங்கி, அநாகரீகமான முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்து அச்சுறுத்தியுள்ளார்.
இந்த எதிர்பாராத அத்துமீறலால் நிலைகுலைந்த அந்த மருத்துவர், தைரியமாக உதவி கேட்டுச் சத்தமிட்டுள்ளார். இதனால் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மருத்துவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
