டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் 28 வயது இளம் தாய் ஒருவர், ஓடும் வேனில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அந்தப் பெண், தனது தோழி வீட்டிற்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வேனில் வந்த இரு இளைஞர்கள், அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிடுவதாக ஆசை வார்த்தை கூறி வேனில் ஏற்றியுள்ளனர். அவர்களை நம்பி வேனில் ஏறிய அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல், ஆள் நடமாட்டமற்ற சாலையில் வைத்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளது.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலையில் அந்தப் பெண்ணைச் சாலையோரம் தூக்கி வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தேறிய பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
