தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் பதவியில் விஜய் பிடிவாதமாக இருந்ததால், அந்தப் பேச்சுவார்த்தை முறிந்தது.
இந்நிலையில், சோழிங்கநல்லூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியினர் நடிகர் அஜித்துடன் அவர் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தைப் பரிசாக வழங்கினர். இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பெற்றுக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய் தனித்து களம் காண்பதால், அடுத்தகட்டமாக அஜித் ரசிகர்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்க்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜித் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும், அவரது ரசிகர் மன்றங்களின் பலத்தைப் பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக நாமக்கல் கூட்டத்தில் தவெக கொடியைக் கண்டு உற்சாகமடைந்த எடப்பாடி, இப்போது அஜித் புகைப்படத்தை ஏந்தி நிற்பது ரசிகர் பட்டாளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு யுக்தியாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவிற்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
