திருட்டு கதை பஞ்சாயத்தில் சிக்கிய பராசக்தி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவால் படம் ரிலீஸாவதில் சிக்கல்!

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவர உள்ள பராசக்தி படம் திருட்டு கதை பஞ்சாயத்தில் இப்போது சிக்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்று திரைப்பட இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது, நான் எழுதிய செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. எனது அனுமதி இன்றி உருவாக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் உண்மைத்தன்மையை கண்டறிய முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

   

அதன்படி இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் செம்மொழி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு கதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து எழுத்தாளர் சங்கம் ஆய்வு செய்து அந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. எழுத்தாளர் சங்கத்தின் இந்த அறிக்கை ஜனவரி 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பராசக்தி படத்தின் வெளியீடு குறித்த இறுதி முடிவு தெரிய வரும்.